பரிசில் உள்ள l'université Paris-Cité பல்கலைக்கழகத்தில் வைத்து பெண் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பரிஸ் 6 ஆம் வட்டாரத்தின் rue des Saints-Pères வீதியில் உள்ள குறித்த பல்கலைக்கழகத்தில் இன்று புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள கட்டிடம் ஒன்றின் 7 ஆவது தளத்தில் பகல் 1 மணி அளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மேற்படி கத்திக்குத்து தாக்குதல் பல்கலைக்கழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கத்திக்குத்துக்கு இலக்கான குறித்த 20 வயதுடைய பெண் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தாக்குதலாளி முதலில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ள நிலையில், சிலமணிநேரங்களிலேயே குறித்த நபர் Vanves-Malakoff (Hauts-de-Seine) தொடருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
மேற்படி தாக்குதல் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.