அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவமனையில் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் உள்ள Cochin மருத்துவமனைக்கு, கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி 34 வயதுடைய பெண் ஒருவர் அழைத்துவரப்பட்டிருந்தார். நிறைந்த மதுபோதையில் இருந்த அப்பெண், சுயநினைவற்று இருந்துள்ளார். மாடிப்படிகளில் வழுக்கி விழுந்ததை அடுத்து அவரது தலையில் காயம் ஏற்பட்டு அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அன்றிரவு அப்பெண்ணை மர்ம நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அப்பெண்ணிடம் இருந்த வங்கி கடன் அட்டைகளைத் திருடிக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
சில நாட்கள் கழித்து குறித்த பெண் மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
அதையடுத்து, 22 வயதுடைய ஜோர்தான் நாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தின் போது குறித்த ஜோர்தான் நாட்டு நபரும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருந்ததாகவும், அவரே சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாலியல் வல்லுறவு மேற்கொண்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.