நேற்று சனிக்கிழமை சாம்பியன் லீக் (Ligue des Champions) இறுதிப்போட்டி Stade de France மைதானத்தில் இடம்பெற்றது. அதன்போது பலத்த வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின.

ரசிகர்கள் பலர் மைதானத்துக்கு அனுமதியின்றி நுழைந்துள்ளனர். மைதானத்தின் நுழைவாயிற் கதவின் மீது ஏறி உள்ளே குதித்துள்ளனர். குறிப்பாக பிரித்தானிய ஆதரவாளர்கள் பலர் போலியான நுழைவுச் சீட்டுக்களுடனும், நுழைவுச் சீட்டு இல்லாமலும் அத்துமீறி உள் நுழைந்துள்ளனர். மைதானத்தின் இருக்கைகளிலும் வன்முறை நீடித்ததால் 36 நிமிடங்கள் போட்டி தாமதமாக ஆரம்பித்தது.
மேற்படி சம்பவங்களுக்கு உள்துறை அமைச்சர் Gérald Darmanin கடுமையான கண்டனங்கள் வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று மாலை 53 பேர் கைது செய்யப்படதாகவும் அவர்களில் 23 பேர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற சாம்பியன் லீக் இறுதிப்போட்டியில் Liverpool மற்றும் Real Madrid அணிகள் மோதின. இதில் இதில் 1-0 எனும் கோல் கணக்கில் Real Madrid அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.