பிரான்சில் ‘குட்டி யாழ்ப்பாணம்’ என அழைக்கப்படும் ‘பரிஸ் லாச்சப்பல்’ பகுதியில் தமிழ்மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகள் மற்றும் தாயகத்து மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பாக பிரான்ஸ் தமிழ் வர்த்தகர்களுக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுக்கும் இடையில் வர்த்தகவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட கலந்துரையாடல் நடைபெற்றது.
பிரான்சின் பிரபல வர்த்தகர் பாஸ்கரன், பிரான்ஸ் இலங்கை தமிழ் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரும் பிரான்ஸில் வளர்ந்து வரும் பிரபல வர்த்தகருமான தயா, உட்பட்ட பல வர்த்தகர்களும் இந்நிகழ்வினைத் தலைமை தாங்கி நடாத்தியதோடு தங்களுடைய கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் வாழ் தமிழ் வர்த்தகர்கள் யாழ்.மாநகர சபையின் தற்போதைய செயற்பாடுகளையும் மாநகர முதல்வர் மணிவண்ணன் அவர்களின் செயற்பாடுகளையும் வெகுவாகப் பாராட்டினர்.
லாச்சப்பல் என்பது குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படுகின்ற நிலையில் யாழ்.மாநகர முதல்வரை இங்கு வரவழைத்து மதிப்பளிப்பதனை பிரானஸ் வாழ் தமிழ்வர்த்தகர்கள் பெரு கொள்ளுகின்றோம் என்று தெரிவித்தனர். மற்றும் மீண்டும் எங்களுடைய தாய் நாட்டிற்கு செல்லவேண்டும் என்ற கனவுடன் தான் நாங்கள் இங்கு பல இன்னல்களை எதிர்கொண்ட போதும் எங்களுடைய பணிகளைத் தொடர்கிறோம் என்றும் தெரிவித்தனர்.
பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தாயகத்து மக்களது கல்வி சுயதொழில் வாழ்வாவதார மேம்பாடு தொழில் முயற்சி மற்றும் அவர்களின் தனித்துவ அடையாளங்களைப் பேணுவதற்கு தம்மால் ஆன உதவிகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்ததோடு யாழ்.மாநகர சபையின் செயற்பாடுகளில் தங்களையும் இணைத்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்த பிரான்ஸ் வாழ் தமிழ் வர்த்தகர்கள் யாழ்.மாநகரத்தில் ஒரு பெரிய முக்கியமான செயற்றிட்டம் ஒன்றிணை தாங்கள் அனைவரும் இணைந்து செயற்படுத்தி தருவாதாக உறுதியளித்தனர்.
இறுதியாக மாநகர முதல்வர் தலைமையிலான குழுவினர் பிரான்ஸ் வாழ் வர்த்தக சமூகத்தினரால் மதிப்பளிக்கப்பட்டதுடன் இரவு உணவும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.