உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஏதாவது உதவிக்கு வந்தால், அவர்கள் வரலாற்றில் இதுவரை சந்திக்காத அளவுக்கு பயங்கர பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்திருந்தார் ரஷ்ய அதிபர் புடின்.

அப்படி, வரலாற்றில் இதுவரை சந்திக்காத அளவுக்கு பயங்கர பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என புடின் மிரட்டியதற்கு பொருள் என்ன என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சரான Jean-Yves Le Drianஇடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு பதிலளித்த அவர், அணு ஆயுதங்கள் போரில் பயன்படுத்தப்படும் என்பதுதான் அதன் பொருள் என புரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் புடின் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும், அட்லான்டிக் கூட்டணியும், அதாவது நேட்டோ நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. அவ்வளவுதான் என்னால் கூறமுடியும் என்றார்.

அதாவது, அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்குவேன் என புடின் மிரட்டல் விடுத்தால், நேட்டோ நாடுகளும் அதற்கு சரியான பதிலடி கொடுக்கும் என்பது அதன் பொருள்.

இதற்கிடையில், ரஷ்யா உக்ரைனுக்கிடையிலான போரில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதியான Volodymyr Zelenskiy, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் மட்டுமல்லாமல், பிரித்தானியா மற்றும் பிரான்சிடமும் அணு ஆயுதங்கள் உள்ளது என்பதால், அவற்றால் ஏற்படும் பயங்கர அபாயம் குறித்த விடயம் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.